சீனா: கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கிய ராணுவம்...!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தடுப்பு பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பீஜிங்,

சீனாவின் மிகப்பெரிய நகரும், அந்த நாட்டின் பொருளாதார தலைநகருமான ஷாங்காயில் கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் சுமார் 9 ஆயிரம் பேர் ஷாங்காய்வாசிகள் ஆவர்.

எனவே அங்கு தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளை சீனா முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இதில் ராணுவம், கடற்படையை சேர்ந்த டாக்டர்கள் சுமார் 2 ஆயிரம் பேரும் அடங்குவர். இதன் மூலம் தொற்று கட்டுப்பாட்டு பணிகளில் ராணுவத்தையும் சீனா களமிறக்கி உள்ளது. ஷாங்காயில் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன் நகரவாசிகள் 2.5 கோடி பேருக்கு பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com