

பெய்ஜிங்,
சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை 275 பில்லியன் டாலராக (ரூ.25 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்த பட்ஜெட்டை விட 2.5 பில்லியன் டாலர் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் சபையில் பட்ஜெட்டை அந்நாட்டு பிரதமர் லி கியாங் தாக்கல் செய்தார். அதில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
அதிகரித்து வரும் போர் பதற்றத்திற்கு இடையே சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை அதிகரித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. போர் தளவாடங்களை நவீனப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்களுக்காக பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக தொகையை செலவிடும் நாடாக சீனாவே உள்ளது. சீனா கடந்த 2024 ஆம் ஆண்டு தனது ராணுவத்திற்கு முந்தையை ஆண்டை விட 7.2 சதவீதம் உயர்த்தியிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை உயர்த்தி வருவது இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பெரும் சவாலானதாக அமைந்து இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்த்துள்ளனர்.