

பீஜிங்,
உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனையையும், பகுத்தறிவையும் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஏ.ஐ. துறையில் கால்பதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய ஏ.ஐ. மாடல்களை அறிமுகம் செய்து சந்தைக்கு கொண்டு வந்துள்ளன.
அதே சமயம், அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கிய சீனாவின் ‘டீப் சீக்’(DeepSeek) நிறுவனம் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. நொடிகளில் பல ஆயிரம் தரவுகளை கொட்டிக் கொடுக்கும் ‘டீப் சீக்’ ஏ.ஐ., உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ‘டீப் சீக்’நிறுவனம் தனது புதிய 'V4' ஏ.ஐ. மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒரு மில்லியன் வார்த்தைகள் வரை தகவலை புரிந்து கொண்டு செயல்படக்கூடிய AI Pro மற்றும் Flash என இரு மாதிரிகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பல சிக்கலான பணிகளை சிறப்பாக செய்து முடிக்கலாம் என்று கூறப்படுகிறது.