

பீஜிங்,
கழிவுகள் பூமியில் எப்படி இடையூறுகளை, சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகிறதோ அதுபோலவே விண்வெளியில் சேரும் குப்பைகளும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே விண்வெளி கழிவுகளை கண்காணிப்பது அவசியமாகிறது. விண்வெளியில் ஒரு சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட கழிவுகள் அதிவேகமாகச் சுற்றி வருகின்றன.
இவை விண்கலன்கள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும், விண்வெளிப் போக்குவரத்தை முறைப்படுத்தவும் விண்வெளி குப்பைகளை கண்காணிப்பது அவசியமாகிறது. ஆனால் பரந்த வான்வெளியில் குப்பைகளை கண்காணிப்பது அவ்வளவு எளிதானதல்ல. வானத்தில் குப்பைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க சீனா தனது முதல் செயற்கைக்கோளான 'கண்டே' (Gande) வணிக கூட்டமைப்பை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மொத்தம் 120 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் முதல் செயற்கைக்கோள் கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு சீனாவிலிருந்து 'லிஜியன்-1' ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் மூன்று கட்டங்களாக முழுமையாகச் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.