

பீஜிங்,
உலக நாடுகளுக்கு கொரோனா பரவ காரணமாக இருந்த சீனா, தொற்று நோய் விவகாரத்தில் "பூஜ்ஜிய-சகிப்புத்தன்மை" அணுகுமுறையை கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் காரணமாக சீனா வைரஸ் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பெய்ஸ் நகரில் கடந்த சனிக்கிழமை முதல் திடீரென தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது. புதிவகை கொரோனாவான ஒமைக்ரான் தாக்கத்தால் அங்கு தொற்று அதிகரித்து வருவதாக தெரிகிறது.
14 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஸ் நகரில் நேற்றைய நிலவரப்படி 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு அத்தியாவசிமற்ற அனைத்து கடைகளையும் மூடவும், சாலைகளில் வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.