

வாஷிங்டன்
கடந்த ஜூலை மாதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் வரி அதிகரிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை அதிகரித்தது.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் குறிப்பிட்ட சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 10-லிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.
கடந்த ஆண்டு 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதமே மீண்டும் வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப் பேச்சு நடைபெற்றதால் வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதுவரை இரு தரப்புக்குமிடையே ஒப்பந்தம் ஏற்படாததால் டிரம்ப் மீண்டும் வரி உயர்வை அறிவித்துள்ளார். இது சீனா- அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரமடைய செய்துள்ளது. இதனிடையே சீன அதிகாரிகள் குழுவினர் நாளை மறுதினம் வாஷிங்டனில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.