அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்: 4 பேருக்கு கத்திக்குத்து

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்: 4 பேருக்கு கத்திக்குத்து
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில், அதிபர் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் முடிவுகளை ஏற்க டிரம்ப் தயாராக இல்லை. தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து கூறி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், டிரம்ப் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதனை கட்டுக்குள் கொண்டு வர போலீசாரும் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். 2 போலீசார் காயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என வாஷிங்டன் நகர தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் டக் புச்சனன் கூறியுள்ளார்.

எனினும், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எந்த குழுவை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மோதலும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட 10 பேர், போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 6 பேர் மற்றும் கலகத்தில் ஈடுபட்ட 4 பேர் உள்பட 23 பேரை போலீசார் நேற்றிரவு 9 மணியளவில் கைது செய்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த 2 போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த மோதலில் போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com