கொரோனா கட்டுப்பாட்டை மீறியதாக புகார்; ஐரோப்பிய யூனியன் வர்த்தக கமிஷனர் ராஜினாமா

கொரோனா கட்டுப்பாட்டை மீறியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் வர்த்தக கமிஷனர் ராஜினாமா செய்தார்.
கொரோனா கட்டுப்பாட்டை மீறியதாக புகார்; ஐரோப்பிய யூனியன் வர்த்தக கமிஷனர் ராஜினாமா
Published on

பிரசல்ஸ்,

ஐரோப்பிய யூனியனின் வர்த்தக கமிஷனராக பதவி வகித்து வந்தவர், பில் ஹோகன். இவர் கல்வே கவுண்டியில் கடந்த 19-ந்தேதி நடந்த கோல்ப் விருந்து ஒன்றில் 80 பேருடன் கலந்து கொண்டார் என்றும், இது அயர்லாந்து அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய செயல் என்றும் புகார் எழுந்தது. இதை பி.பி.சி. செய்தியாக்கியது.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் இருந்து அயர்லாந்து திரும்பியபோது, அவர் தனிமைப்படுத்துதல் விதியை பின்பற்ற வில்லை என்றும் புகார் கூறப்பட்டது. ஆனால் அவர் இதை மறுத்தார். தான் சட்டத்தை மீறவில்லை என்றும், கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடித்து வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் பதவி விலக கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தில், அவர் அயர்லாந்துக்கு வந்தது குறித்து வருத்தம் வெளியிட்டுள்ளார். தனது வருகையின்போது நடந்த தவறுகளுக்காக அயர்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறி உள்ளார்.

அயர்லாந்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகள்படி, யார் அங்கு சென்றாலும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com