

பீஜிங்,
சீனாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான 'சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் கடந்த மார்ச் 21-ந்தேதி அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டது.
அந்த விமானத்தில் 123 பயணிகள் 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் பயணித்தனர். விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
சீனாவில் 132 பேரை பலிகொண்ட சமீபத்திய பயணிகள் விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த கோர விபத்துக்கு துணை விமானி காரணமாக இருக்கலாம் என்ற செய்தி உலா வருகிறது.
விமானத்திலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல்களும் இதற்கு இசைவாக உள்ளன. மேலும், சீன விமானிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க சீன அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றையெல்லாம் குறிப்பிட்டு விபத்துக்கு துணை விமானி காரணமாக இருக்கலாம் என்ற செய்தி உலா வருகிறது.
ஆனால், சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் (சி ஏ ஏ சி), அத்தகைய வதந்திகளை மறுத்துள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
விபத்துக்கான காரணம் மற்றும் தன்மை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய முதன்மை விமானி, இதற்கு முன்னதாக 6,709 மணிநேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். அவருடன் துணை விமானிகளாக இருந்தவர்களும் முறையே 31,769 மணிநேரம் மற்றும் 556 மணிநேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள்.
இந்த வதந்திகள் சில பொது பாதுகாப்பு துறைகளில் இருந்து வந்தவை, இந்த வதந்திகள் தவறானவை. இந்த வதந்திகள் நடந்து வரும் விசாரணையில் பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும், சட்ட மீறலைக் குறிக்கலாம்.
விபத்துக்கான காரணத்தை விரைவில் கண்டறிய முயற்சிப்போம். சட்ட நடைமுறைகளின்படி உரிய தகவல்களை வெளியிடுவோம்.
விமானிகள், விமான பணிப்பெண்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர்களின் உளவியல் அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விமான போக்குவரத்து நிர்வாகம் எடுத்துள்ளது.
இவ்வாறு விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை விசாரிக்க உதவுவதற்காக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தால் அனுப்பப்பட்ட பணிக்குழு சீனாவுக்கு சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.