கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் செலுத்திய தடுப்பூசி 708 கோடி

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் இதுவரை 708 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் செலுத்திய தடுப்பூசி 708 கோடி
Published on

நியூயார்க்,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.78 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,78,24,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 4.6 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 7.46 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.42 கோடி பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர். 4.58 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்றைய நிலவரப்படி 708 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. அதில் 302 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52.02 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் தடுப்பூசி டோஸ்களை செலுத்தியுள்ளனர். உலக அளவில் மிக அதிக அளவாக சீனாவில் 224.9 கோடி தடுப்பூசிகளும், இந்தியாவில் 107.19 கோடி தடுப்பூசிகளும் இதுவரை செலுத்தப்பட்டு உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com