2023-24ல் உலக அளவில் அன்றாட செலவுகள் அதிகரிப்பு உச்சநிலையை எட்டும் - உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையில் தகவல்

‘உலகளாவிய அபாயங்கள் 2023’ என்ற அறிக்கையை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது.
2023-24ல் உலக அளவில் அன்றாட செலவுகள் அதிகரிப்பு உச்சநிலையை எட்டும் - உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையில் தகவல்
Published on

ஜெனீவா,

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள காலாக்னி நகரை தலைமையிடமாக கொண்ட உலக பொருளாதார மன்றம் சார்பில், உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் என மொத்தம் 1,200 பேரிடம் இருந்து வருடாந்திர உலகளாவிய அபாயங்கள் குறித்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் 'உலகளாவிய அபாயங்கள் 2023' என்ற அறிக்கையை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சர்வதேச அளவிலான 10 அபாயங்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி உலக அளவில் அன்றாட செலவுகள் அதிகரிப்பு குறுகிய கால ஆபத்தாக இருக்கும் எனவும், அடுத்த 2023-24ம் ஆண்டுகளில் அது உச்சநிலையை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் 2-வது உலகளாவிய ஆபத்தாக இயற்கை பேரழிவு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளும், 3-வது உலகளாவிய ஆபத்தாக புவி பொருளாதார மோதல் இருக்கும் என்றும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன்-ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக நாணய கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்களால் பொருளாதாரம் மிக குறைந்த அளவில் வளர்ந்து வருவதாகவும், முதலீடுகள் மிகவும் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச அளவில் காலநிலை மற்றும் இயற்கை தொடர்பான அபாயங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மோசமான நிலையை அடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com