

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவும் அதே வேகத்தில் தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஜெர்மனியின் பயோன் டெக் நிறுவனத்துடன் இணைந்து பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. எனினும் ஒப்புதலுக்கு முன்னதாகவே மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது இந்த நிலையில் மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், மாடர்னா நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கவுள்ளோம். முதலில் கொடுத்த கொள்முதல் ஆணைப்படி 10 கோடி தடுப்பூசிகள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிலும் தற்போது செய்துள்ள உடன்பாட்டின்படி 10 கோடி தடுப்பூசிகள் 2-ம் காலாண்டிலும் கிடைக்கும் எனக்கூறினர்.