

ஜாக்ரெப்
குரோஷியாவில் மாணவர்கள் இடையே நடந்த மோதல் முற்றி கத்திக்குத்தில் முடிந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.
குரோஷியா நாட்டின் தலைநகர் ஜாக்ரெப்பில் உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு மோதலாக மாறியது. இதில் ஒரு மாணவன் சக மாணவரையும், பள்ளி ஊழியரையும் கத்தியால் குத்தினார்.
அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கத்திக்குத்தில் ஈடுபட்ட மாணவனை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். காயமடைந்த மாணவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில், ஜாக்ரெப் நகரில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது. முன்னாள் மாணவர் ஒருவர் அவர் படித்த பள்ளிக்கு சென்று கத்தியால் தாக்கியதில் 7 வயது சிறுமி பலியானாள்.
இதுதவிர, ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகள் 3 பேர் பலத்த காயமடைந்தனர். குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.