நைஜீரியாவில் கனமழை: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வனவிலங்குகள்

வனஉயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த வனவிலங்குகள் வெள்ளத்தில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.
நைஜீரியாவில் கனமழை: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வனவிலங்குகள்
Published on

அபுஜா,

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தலைநகர் மைதுகுரி உள்ளிட்ட நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன.

இந்தநிலையில் மைதுகுரி வனஉயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த வனவிலங்குகள் வெள்ளத்தில் இருந்து தப்பி ஊருக்குள் புகுந்துள்ளது. முதலைகள், பாம்புகள், நெருப்புக்கோழிகள், நீர்யானைகள் உள்ளிட்டவை தப்பி குடியிருப்புக்குள் புகுந்தன. அவற்றை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சிங்கங்கள், செந்நாய்கள், வரிக்குதிரைகள் மற்றும் கழுதை புலிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுகள் நீரில் மூழ்கியதில் அவை உயிரிழந்திருக்கலாம் என பூங்கா நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள் ஆற்றங்கரைகளுக்கு அருகில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகோ ஹராம் போராளிகளின் நீண்டகால கிளர்ச்சியுடன் போராடி வரும் போர்னோவில் ஏற்கனவே கடுமையான மனிதாபிமான நெருக்கடியை இந்த வெள்ளம் மேலும் மோசமாக்கி உள்ளது.

இயற்கை பேரழிவுகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள் இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடுவதால், வடகிழக்கு நைஜீரியா எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களை இந்த சூழ்நிலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகளைத் தடுக்க உடனடி மனிதாபிமான உதவி மற்றும் நீண்டகால தீர்வுகள் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com