ஈரானில் பள்ளி மீதான தாக்குதல் கடுமையான 'மனித உரிமை மீறல்': யுனெஸ்கோ குற்றச்சாட்டு

ஈரானில் பள்ளி மீதான தாக்குதலில் பலி எண்ணிக்கை தற்போது 165 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் பள்ளி மீதான தாக்குதல் கடுமையான 'மனித உரிமை மீறல்': யுனெஸ்கோ குற்றச்சாட்டு
Published on

துபாய்,

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டுத்தாக்குதல் நடத்தின. அங்குள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில் ஏற்கனவே 85 மாணவிகள் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், அந்த பள்ளி மீதான தாக்குதலில் பலியானவர்களின் எண் ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஈரானில் பள்ளி மீதான தாக்குதல் கடுமையான 'மனித உரிமை மீறல்' என யுனெஸ்கோ குற்றம் சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக யுனெஸ்கோ தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய கிழக்கில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கைகளால் கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் மீது ஏற்படும் தாக்கம் குறித்து யுனெஸ்கோ ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

தெற்கு ஈரானில் உள்ள மினாபில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியில் நடந்த தாக்குதலில் ஏராளமான மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கற்றலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் கொல்லப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் கடுமையான மீறலாகும்.

கல்வி நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. கல்வி உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அதன் ஆணை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2601 (2021) இன் படி, பள்ளிகள், மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து தரப்பினரின் கடமைகளையும் யுனெஸ்கோ நினைவு கூர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com