ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல- அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரான் - அமெரிக்கா இடயேயான போர் நிறுத்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தாக உள்ளது.
ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல-  அமெரிக்க அதிபர் டிரம்ப்
Published on

கடந்த பிப்ரவரி 28-ந் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்தன. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் வெடித்தது. இதனால் உலக அளவில் எண்ணெய் சந்தைகள் ஆட்டம் கண்டன. எண்ணெய் விலை முன்எப்போதும் காணாத உச்சத்தைத் தொட்டது. இருதரப்பு இடையே அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் களம் இறங்கின.

வெள்ளிக்கிழமை ஒப்பந்தம்

இந்த நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. லெபனான் உட்பட அனைத்து பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 3½ மாதங்களாக நீடித்த அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் தமக்கு திருப்தி அளிக்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியுடன் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அமெரிக்கா-ஈரான் இடையேயான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இது இறுதி ஒப்பந்தம் அல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. அதன் ஷரத்துகள் எனக்கு பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். குண்டுகளை வீசுவோம். ஒப்பந்தப்படி சரியாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ அல்லது ஒப்பந்தம் எனக்கு ஏற்றதாக இல்லை என்றாலோ, மீண்டும் தாக்குதல்களை தொடங்குவோம்” என்றார். அதே நேரத்தில், அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம் மிகவும் வலுவானது என்றும் அவர் தெரிவித்தார். அந்த ஒப்பந்தத்தின் முழு விவரம் யாருக்கும் தெரியாது. ஆனால் அது மிகவும் வலுவானது” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com