துருக்கி ஓட்டல் தீ விபத்து: பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு

துருக்கி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கி ஓட்டல் தீ விபத்து: பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு
Published on

அங்காரா,

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. தற்போது துருக்கியில் 2 வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால், இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இந்த ஓட்டலில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com