இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 271 ஆக உயர்வு - தேடும் பணி தீவிரம்

தேடுதல் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 271 ஆக உயர்வு - தேடும் பணி தீவிரம்
Published on

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட ஏராளாமன கட்டிங்கள் இடிந்து விழுந்தன.

இதில் 162 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் விடியவிடிய நடந்தது. அந்த வகையில் நேற்று காலை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள். மேலும் 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இன்றைய மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது சிறுவன் மீட்கப்பட்டான். வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய அந்த சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டிருக்கிறான்.

இதனிடையே ஆயிரக்கணக்கான மீட்புப் படையினர் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைத் தேடி வரும் நிலையில், பேரழிவு ஏற்பட்ட நாளில் இருந்து இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com