

லண்டன்,
இந்தியாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த 100 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் நடக்கும் போராட்டம் குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அதன் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வந்தனர். மேலும் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மனுக்களை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி இங்கிலாந்து பாராளுமன்றத்தில், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்தியாவில் நிலவி வரும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்தும் விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்பதால் அதை பார்வையாளர் ரீதியாகவே அணுகுவோம் என இங்கிலாந்துக்கான இந்திய துதர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும் சட்ட விதிகளின் படி ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பியதால் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எது நடந்தாலும் அது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்த அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் கணிசமான அளவிற்கு பரவி இருப்பது தான் முக்கிய காரணம் என்றும் அலெக்ஸ் எல்லிஸ் கூறியுள்ளார்.