

துபாய் மாணவி
உலக அளவில் மொழி, இனம் கடந்து மனிதநேய செயல்பாடுகளை அனைவருக்கும் செய்வதற்கான மனநிலையை இளைய தலைமுறையினருக்கு ஊக்கப்படுத்தும் வகையில் டயானா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இங்கிலாந்து நாட்டின் மறைந்த இளவரசி டயானாவின் நினைவாக கடந்த 1999-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது சிறந்த மனிதநேயம் மற்றும் சமூக நல செயல்பாடு திட்டங்களை புதுமையாக கட்டமைக்கும் இளைஞர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கான விருதுக்காக மொத்தம் 46 நாடுகளை சேர்ந்த 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 9 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் துபாய் தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவியான இந்தியாவை சேர்ந்த ரியா சர்மாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஹாரி பாராட்டு
இந்த மாணவியின் திட்டமானது இந்திய, ஆப்பிரிக்க நாடுகளில் படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு 200 தன்னார்வலர்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். அதேபோல மாணவர்களை மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்ய சக மாணவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.இதேபோல் துபாயில் 7-ம் வகுப்பு படிக்கும் ராகவ் கிருஷ்ணா என்ற இந்திய மாணவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் துபாய் கேர் அறக்கட்டளைக்கு சிரியா நாட்டின் அகதிகளாக உள்ள சிறுவர்களுக்கு உதவும் வகையிலான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதற்காக கடந்த 2019-ம் ஆண்டில் இந்த மாணவருக்கு ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதேபோல சார்ஜாவில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவர் ஹமத் பெய்க், 7-ம் வகுப்பு படிக்கும் கவுரவ் ஜெயபிரகாஷ், 12-ம் வகுப்பு படிக்கும் சுபாங்கர் கோஷ் ஆகிய இந்திய மாணவர்களும் இந்த டயானா விருதுகளை பெற்றுள்ளனர்.
விருது பெற்ற பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கு இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹாரி பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.