

கைலாசா,
திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தா, கர்நாடகாவில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி பிரபலமானார். இவருடைய சொற்பொழிவை பார்த்து வெளிநாட்டினர் பலரும் அவரை குருவாக ஏற்றுக்கொண்டனர். ஆன்மிகத்தால் எந்த அளவுக்கு நித்யானந்தா பிரபலம் அடைந்தாரோ, அதைவிட பாலியல் புகார்களால் மேலும் பிரபலம் அடைந்தார்.
போலீசாரால் தேடப்படும் நபரான நித்யானந்தா இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா என்ற தீவையே உருவாக்கி சீடர்களுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக செய்தி பரவியது. அதை அவருடைய சீடர்கள் மறுத்தனர். பிறகு, பல ஆண்டுகளாக அவர் டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இருந்தாலும், அவ்வப்போது நித்யானந்தா தனது வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் புத்தாண்டு செய்தி ஒன்றையும் நித்யானந்தா வெளியிட்டுள்ளார். அதில், "இந்த 2026-ம் ஆண்டில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: சாட்சி பாவம். அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால், இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும்" என்று தெரிவித்துள்ளார். இறுதியாக, "பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.