

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களை பார்க்கவே அரிது என்று சொல்லும் அளவுக்கு, இன்று அனைவரின் கைகளிலும் செல்போன்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்(iOS) இயங்குதளங்களே தற்போது மொபைல் சந்தையில் முன்னிலை வகிக்கின்றன.
அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்துக்கு சொந்தமானது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது செல்போன் பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கி வரும் போன்களுக்கு இனி பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டேட்டா திருட்டு மற்றும் சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க, பயனர்கள் உடனடியாக தங்களின் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும் என்று கூகுள் கேட்டுக்கொண்டுள்ளது.