

புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா தீவில் தஞ்சம் அடைந்திருந்தார். அங்கிருந்து கடந்த மாதம் 23-ந் தேதி டொமினிக்காவுக்கு சென்றபோது, சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி, அவருடைய வக்கீல்கள் டோமினிக்கா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, டொமினிக்கா ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மெகுல் சோக்சி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மெகுல் சோக்சியின் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும், நீரிழிவு ரத்த அழுத்தம் உட்பட்ட நோய்கள் உள்ளதாக மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சோக்சிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அவர் ஆன்டிகுவா சென்று சிகிச்சை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சோக்சி டொமினிக்கா ஐகோர்ட்டில் மீண்டும் ஆஜராவதற்கு ஏற்ப அவர் உடல்நிலை உள்ளதாக மருத்துவர் அறிக்கை தந்தால் மட்டுமே அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர் சட்ட விரோதமாக டொமினிக்காவில் நுழைந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சோக்சி ஆன்டிகுவாவிற்கு திரும்ப உள்ளார். இது அவரை நாடு கடத்துவதற்காக டொமினிக்கா சென்ற சி.பி.ஐ. டைரக்டர் டி.ஐ.ஜி. சாரதா ராவுத் தலைமையிலான குழுவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக சோக்சியை நாடு கடத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.