அமெரிக்காவின் ஏ.ஐ. பிரிவின் ஆலோசகராக தமிழர் நியமனம்

இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் ஆவார்.
அமெரிக்காவின் ஏ.ஐ. பிரிவின் ஆலோசகராக தமிழர் நியமனம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு தங்களின் அரசின் முக்கிய பொறுப்புகளை வழங்கி உள்ளார். அதேபோல, விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றி உள்ளார். தமிழரான இவர் சென்னை காட்டாங்கொளத்துரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்சுடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏ.ஐ.,க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க இருக்கிறார்.

அரசின் ஏ.ஐ., கொள்கையை வடிவமைக்க இருக்கும் இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com