‘இளவரசர் என அழைக்காதீர்கள்’ - ஹாரி வேண்டுகோள்

தன்னை இனி இளவரசர் என யாரும் அழைக்க வேண்டாம் என்று இளவரசர் ஹாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘இளவரசர் என அழைக்காதீர்கள்’ - ஹாரி வேண்டுகோள்
Published on

எடின்பர்க்,

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து, ராணி 2-ம் எலிசபெத்தின் ஒப்புதலோடு அவர்கள் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறியுள்ளனர்.

எனினும் ஹாரி-மேகன் தம்பதி அரச பொறுப்புகளையும், பட்டங்களையும் முழுமையாக துறக்கவில்லை. அடுத்த மாதம் 31-ந்தேதி அவர்கள் அரச குடும்பத்தில் இருந்து முறைப்படி வெளியேறுகிறார்கள்.

அதற்கு முன்னர் அரச குடும்ப உறுப்பினர்களாக ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர்கள் சம்மதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் நடைபெற்ற சுற்றுலா மாநாடு ஒன்றில் ஹாரி கலந்து கொண்டார்.

மாநாட்டில் பேசிய ஹாரி, தன்னை இனி, அரச குடும்ப அடைமொழியோடு அதாவது இளவரசர் என யாரும் அழைக்க வேண்டாம் என கூறினார். அந்த நடைமுறையை முழுமையாக கைவிடுமாறு வலியுறுத்திய அவர், தனது பெயரை குறிப்பிட்டு மட்டுமே அழைத்தால் போதும் என்று அன்போடு கேட்டுக்கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com