சாட்ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம்; ஓபன் ஏ.ஐ. தலைவர் ஆல்ட்மேன் பேச்சால் பரபரப்பு

சாட்ஜிபிடி மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது என சாம் ஆல்ட்மேன் பேசியுள்ளார்.
நியூயார்க்,
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். எழுதுவது மற்றும் ஆராய்ச்சி செய்வது என பல வழிகளில் அதனை பயன்படுத்துகின்றனர்.
இதற்காக பலரும் சாட்ஜிபிடியை சார்ந்து உள்ளனர். இதனால், வருங்காலத்தில் வேலையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்ற அச்சுறுத்தலும் பரவி வருகிறது.
இந்நிலையில், ஓபன் ஏ.ஐ.யின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சாம் ஆல்ட்மேன் சாட்ஜிபிடி பயனாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், சாட் ஜிபிடியை அப்படியே நம்ப வேண்டாம். கேள்வி கேளுங்கள். அப்படி கேட்காமல் அதன் தகவல்களை நம்ப வேண்டாம் என்று ஆல்ட்மன் அறிவுறுத்தியுள்ளார்.
சாட் ஜிபிடியை கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம் என எச்சரித்து உள்ள அவர், அதனை ஆய்வு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என பயனாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
சாட்ஜிபிடி மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளனர். இது ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால், அதனை நீங்கள் அதிகம் நம்ப வேண்டாம் என கூறினார். மக்களிடையே அது பிரபலம் அடைந்துள்ளது.
ஆனால், அதனை அதிகம் நம்புவது என்பது ஆபத்துகளையும் ஏற்படுத்தும். ஆய்வு செய்யாமல் அதன் பதில்களை அப்படியே ஏற்று கொள்ளும்போது, பயனாளர்களுக்கு ஜோடிக்கப்பட்ட தகவல்கள் அல்லது தவறான தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இது தொழில்நுட்ப உலகில் மற்றும் பயனாளர்கள் மத்தியில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.






