இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதிக்கு கடுமையாக பாதிப்பு; பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதிக்கு கடுமையாக பாதிப்பு; பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலகளாவிய தெற்கு பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Published on

ரியோ டி ஜெனிரோ,

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் நேற்று அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார்.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதேபோன்று, கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனலையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களின் பேச்சுவார்த்தையின்போது, மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், 21-ம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியானது விளிம்பு நிலையில் உள்ளது என சுட்டி காட்டி பேசினார். அதனால், சர்வதேச அமைப்புகளில் விரிவான சீர்திருத்தங்களுக்கான அவசர தேவையையும் அவர் சுட்டி காட்டினார்.

இதேபோன்று இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 2026-ம் ஆண்டில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும், இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

X

Dailythanthi
www.dailythanthi.com