வெற்றிகரமாக கடலில் இறங்கியது டிராகன் விண்கலம்... வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா

டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
Published on

கலிபோர்னியா,

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர்.

விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன் பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.

அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும். இந்தநிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.

விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

விண்கலம் தரையிறங்கியதும், ஸ்பேஸ்எக்ஸின் மீட்பு கப்பல் விண்கலத்தை அடைந்து, விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்து சென்றனர். 4 பேரும் வாண்டன்பெர்க் விண்வெளி படைதளத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்கள் மறுவாழ்வை தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். சுக்லாவின் பணி இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என்று நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். விண்வெளி வீரர்கள் 4 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என நாசா அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com