கவர்ச்சியான மனைவியின் புகைப்படங்களால் போலீசில் சிக்கிய போதை பொருள் கும்பல் தலைவன்

அமெரிக்காவில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனான லூயிசின் மனைவி கவர்ச்சியான உடையுடன் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
கவர்ச்சியான மனைவியின் புகைப்படங்களால் போலீசில் சிக்கிய போதை பொருள் கும்பல் தலைவன்
Published on

லண்டன்,

அமெரிக்காவில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டு வருபவர் லூயிஸ் கிரிஜல்பா (வயது 43). இவருடைய மனைவி எஸ்தபானியா மெக்டொனால்டு ரோட்ரிகீஸ். போலீசாரால் தேடப்படும் நபராக லூயிஸ் உள்ளார்.

இவருக்கு எதிராக, கோஸ்டா ரிக்காவில் இருந்து கொக்கைன் என்ற போதை பொருளை ஏற்றுமதி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது தொடர்பாக, அவரை கைது செய்ய அமெரிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், மனைவி எஸ்தபானியாவுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு சென்ற லூயிஸ், ஈபிள் கோபுரம் முன் மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதன்பின்னர், லண்டன் நகருக்கு சென்ற லூயிஸ், லண்டன் பாலம் அருகே காணப்பட்டார்.

கவர்ச்சியான உடையுடன் புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்த லூயிசின் மனைவி அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். பல ஆடம்பர ஓட்டல்களுக்கும், பிரபல சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் வழக்கம் கொண்டவர் அவர்.

அப்படி சென்றபோது ஓட்டலின் முன்பும், சுற்றுலா ஸ்தலங்களிலும் நின்று பல புகைப்படங்களை எடுத்து அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் வந்துள்ளார். இந்த அடையாளங்கள் அவர்கள் எந்த பகுதியில் உள்ளனர் என்ற விவரங்களை காட்டியுள்ளது.

இந்த புகைப்படங்களின் உதவியுடன், தேசிய குற்ற புலனாய்வு முகமை (என்.சி.ஏ.) அதிகாரிகள் லூயிசை பின் தொடர்ந்து சென்று கைது செய்தனர்.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, எப்போதும், லூயிஸ் வெளிநாடு செல்லும்போது, மனைவியை விட்டு தனியாக இருக்க கூடியவர். ஆனால், இந்த முறை மனைவியுடன் நெடுநேரம் ஒன்றாக செலவிட்டு உள்ளார். இதில், அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார் என தெரிவித்தனர்.

கொலம்பியா, ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர். பல சுற்றுலா ஸ்தலங்களில் புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளனர். அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கின்றனர். பல மாதங்களாக, கிரிஜல்பாவை அதிகாரிகள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இந்த முறை அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என கூறினர்.

லூயிசுக்கு எதிராக, 2 படுகொலை முயற்சிகளில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன என என்.சி.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com