

கெய்ரோ,
எகிப்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு எகிப்து. இந்நாட்டின் தெற்கு சினாய் மாகாணத்தில் உள்ள தோடாக் - நுவைபா நெடுஞ்சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 43 பேர் பயணித்தனர். இதில் 22 பேர் ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், தோடாக் - நுவைபா நெடுஞ்சாலையில் அல் சடா பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஜோர்டான் நாட்டினர் 10 பேர் உள்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் , படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.