

தெக்ரான்,
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
மேலும் உலகின் கச்சா எண்ணை போக்குவரத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் பாரசீக வளைகுடாவில் ஏராளமான கப்பல்கள் தங்களது பயணத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றன.
இதையடுத்து கச்சா எண்ணை, எரிவாயு விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை தடுக்க கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது.
இதற்கிடையே ஹோர்முஸ் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறியதாவது:-
ஹோர்முஸ் ஜலசந்தியை நாங்கள் மூடவில்லை. உண்மையில் அந்த ஜலசந்தி திறந்தே இருக்கிறது. இது எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே இந்த முக்கிய கடல் பாதை மூடப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக கடந்து செல்லலாம். பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல கப்பல்கள் இந்த பாதையைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
அதேபோல் ஈரான் புரட்சிகர காவல்படை கடற்ப டையின் தளபதி அலிரேசா டாங்சிரி கூறும்போது,
ஹோர்முஸ் ஜலசந்தி ராணுவ ரீதியாக தடுக்கப்படவில்லை அது வெறும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரானின் கடற்படையை அழிப்பது அல்லது எண்ணை கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குவது பற்றிய அமெரிக்காவின் கூற்றுக்கள் தவறானவை ஆகும் என்றார். நேற்று இந்தியாவை நோக்கி வந்த 2 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.