

சென்னை,
வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 6500 கோடி பீப்பாய் உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதியை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ, பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்தும் திட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் வெனிசுலா நாட்டின் எண்ணெய் துறையில் சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு ஈர்க்கப்படும் என்றும், வெனிசுலா அரசுக்கு 20,900 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்த வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்கா உடனான எரிசக்தி ஒப்பந்தம் 25 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், "அமெரிக்க ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது. நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பீப்பாயாக உயர்த்துவதை இலக்காக கொண்டது. அது வெனிசுலா பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும். அரசின் வருவாயை பெருக்க உதவும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க பயன்படும்" என்று தெரிவித்துள்ளார்.