

லண்டன்
இங்கிலாந்தில் போலீஸ் கார் மற்றும் வாகனம் மோதி கொண்டதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
இங்கிலாந்தின் டீசைடு பகுதியில் மிடில்ஸ்புரோ பகுதியருகே வோல்க்ஸ்வேகன் வாகனம் ஒன்றில் சிலர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் தவறான பாதையில் பயணித்துள்ளனர் என கூறப்படுகிறது. இதனால், அவர்களை போலீசார் காரில் துரத்தி உள்ளனர். இதனை கண்டதும் அந்த வாகனம் விரைவாக சென்றது.
இந்த சேசிங்கில் போலீசாரின் கார், வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தலைமை காவலர் விக்டோரியா புல்லர் கூறும்போது, விபத்தில் இரண்டு வாகனங்களிலும் இருந்த மொத்தம் 7 பேர் பலியாகி விட்டனர் என்றார். அவர்களில் 2 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர்.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ஆம்புலன்சுகளும், போலீஸ் வாகனங்களும் சென்றன. இந்த பகுதி ஆலைகள் மற்றும் தொழிற்சாலை நிறைந்த பகுதியாகும். இதனால், நார்மன்பை சாலையில் இருந்து சர்ச் லேன் வரை போக்குவரத்து தடைப்பட்டது.
வாகன ஓட்டிகள் வேறு வழிகளில் செல்லும்படி அவர்களை, போலீசார் அறிவுறுத்தினர். சம்பவத்திற்கு ரெட்கார் தொகுதி எம்.பி.யான அன்னா டர்லே இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.