

அடிஸ் அபாபா,
எத்தியோப்பியாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் அபி அகமது (42), பங்கேற்ற பொதுகூட்டத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
எத்தியோப்பியாவின் தலைநகரத்தில் உள்ள மெஸ்கல் சதுக்கத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பொதுக்கூட்டம் ஒன்று பிரதமர் அபி அகமது தலைமையில் நடத்தப்பட்டது. இதில் சில மாதங்களுக்கு முன் புதிதாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபி அகமது, பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
தலைநகர் அடிஸ் அபாபாவில் ஆதரவாளர்களிடையே அவர் உரையாற்றி முடித்த உடன் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாவலர்களின் துணையுடன் அந்தப் பகுதியிலிருந்து அவர் வெளியேறினார்.
இந்த குண்டுவெடிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும், 155 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் அமீர் அமன் தெரிவித்தார்.
இதுகுறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் ஆற்றிய உரையில், அன்புதான் வென்றுள்ளது. படுகொலை என்பது தோல்வியின் அடையாளம். இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தன்னைக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி என்றும் குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பிரதமர் அபி அகமது தெரிவித்தார்.