

காத்மாண்டு,
கடந்தாண்டு செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழல் மற்றும் வாரிசு அரசியலை எதிர்த்தும் ‘ஜென்சி’ அமைப்பினர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டத்தில் நடந்த ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சூழலில், அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலியும் (75) , சில அமைச்சர்களும் வன்முறை அசம்பாவிதத்துக்கு பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து நேபாளத்தில் ஆட்சியும் கலைக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்குமுறையில் பங்கு இருப்பதாகத் தெரிவித்து முன்னாள் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, அப்போதைய உள்துறை மந்திரி ரமேஷ் லெகக் (62) ஆகியோர் கடந்த மார்ச் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நேபாள சுப்ரீம் கோர்ட்டு, நிபந்தனையுடன் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது. விடுதலைக்குப் பிறகு சமூக வலை தளத்தில் பதிவிட்ட கே.பி.சர்மா ஒலி, "எந்தவிதமான ஆதாரமும் இன்றி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 13 நாட்கள் என்னைப் பழிவாங்க சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்போது நீதி வென்றுள்ளது" என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.