

பமாகோ,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மாலியின் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்களில் இன்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். தலைநகர் பமாகோ, கிடல் , கொவா உள்பட பல்வேறு நகரங்கள் மீது அல்கொய்தா, ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து தாக்குதல் நடத்தினர். ராணுவ தளங்களை குறிவைத்தும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஆங்காங்கே துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.