போலி செய்திகள் எதிரொலி; ரஷியா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் அதிரடி முடிவு

டிஜிட்டல் உலகில் தவறான தகவலை பரப்புவது, போலி செய்திகள் ஆகியவை சமூகத்தில் குழப்ப நிலையை உண்டு பண்ண கூடியவையாக உள்ளன.
போலி செய்திகள் எதிரொலி; ரஷியா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் அதிரடி முடிவு
Published on

டோக்கியோ,

டிஜிட்டல் உலகில் தவறான தகவலை பரப்புவது, போலி செய்திகள் ஆகியவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எல்லா இடங்களிலும் பரவி காணப்படும் பிரச்சனையாக உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற தகவல்கள் சமூக ஊடக நெட்வொர்க் வழியே மக்களுக்கு சென்று சேர்கின்றன. அவை பொதுமக்களின் எண்ணங்களில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் மற்றும் சமூக குழப்பங்களையும் விளைவிக்கின்றன என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், போலி செய்திகள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசு புது திட்டம் தீட்டி உள்ளது. இதன்படி, தவறான தகவல்கள் பரவலை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவை செயலகத்தில் புதிய பிரிவு ஒன்றை அமைக்க ஜப்பான் அரசு திட்டமிட்டு உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் அமைச்சரவை செயலாளர் மத்சுனோ ஹிரோகாஜு கூறும்போது, போலி செய்திகளை பரப்புவது சர்வதேச அளவிலான மதிப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன் தேச பாதுகாப்பையும் பாதிக்கும் என கூறியுள்ளார்.

இந்த புதிய அமைப்பு, வெளிநாட்டின் தவறான பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில் செயல்படும். இதுபோன்ற பிரிவுகளை ரஷியா, சீனா போன்றவை தங்களது நாடுகளில் ஏற்படுத்தி உள்ளன.

உக்ரைன் போரில் உலக நாடுகளுக்கு தவறான செய்திகள் பரவாமல் தடுக்கும் நோக்கில் ரஷியா இந்த பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளது.

தைவான் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே பகைமை போக்கு நிலவி வரும் சூழலில், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. அந்நாட்டின் முன்னாள் சபாநாயகர் பெலோசியின் தைவான் பயணம் சீனாவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது.

தைவானை, சீனா கட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருப்பது போன்ற சூழல் காணப்படுகிறது. தைவானுக்கு அரசியல் நெருக்கடியும் காணப்படுகிறது.

இதனால், தைவானுக்கும், சீனாவுக்கும் இடையே போர் மூள கூடிய ஆபத்து காணப்படுகிறது என்பது போன்ற செய்திகள் வலம் வந்தன. அவற்றின் உண்மை தன்மை பற்றி அறியும் முன்பு அவை தீவிர தாக்கம் ஏற்படுத்தின.

எனினும், தவறான தகவல்கள் சர்வதேச அளவில் பரவி விடாமல் தடுக்கும் நோக்கில் சீனாவும் புதிய அமைப்பை பயன்படுத்தி வருகிறது.

இதுபோன்ற, சமூகத்தில் குழப்ப நிலையை உண்டு பண்ண கூடிய விசயங்களில் இருந்து உண்மை நிலையை எடுத்துரைக்கும் வகையிலான இந்த அமைப்பை தனது அரசில் புதிதாக உருவாக்கும் முயற்சியில் ஜப்பானும் இறங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com