கார் என்ஜினுக்குள் மறைந்திருந்த 4 அடி நீள மலைப்பாம்பு: குடும்பத்தினர் அதிர்ச்சி!

காரின் என்ஜின் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சுருண்டு கிடப்பதை தம்பதியினர் பார்த்தனர்.
காரின் என்ஜினுக்குள் மறைந்திருந்த 4 அடி நீள மலைப்பாம்பைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
4 அடி நீள மலைப்பாம்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் காரின் என்ஜின் பகுதியில் கிடந்த பாம்பை அழுக்குக் குழாய் என்று நினைத்து தொட முயன்ற குடும்பத்தினருக்கு, அது 4 அடி நீள மலைப்பாம்பு என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

காரை சரிசெய்ய முயன்ற தம்பதி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் அலிஸ் பகுதியைச் சேர்ந்தவர் விண்டி டக். இவரும் இவரது கணவரும் வீட்டில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது காரை நேற்று (புதன்கிழமை) சரிசெய்ய முயன்றனர். அப்போது காரின் என்ஜின் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சுருண்டு கிடப்பதை பார்த்தனர். அது காரில் இருந்து கழன்று விழுந்த ஏதோ ஒரு பழைய அழுக்குக் குழாய் என்று நினைத்து, அதனை அகற்ற நெருங்கினர்.

4 அடி நீள மலைப்பாம்பு

ஆனால், அடுத்த சில நொடிகளில் அந்த பொருள் இவர்களைத் திரும்பி உற்றுப் பார்த்தபோதுதான், அது ஒரு பெரிய பாம்பு என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக பின்னால் ஓடினர். அது 4 அடி நீளமுள்ள 'போவா கான்ஸ்டிரிக்டர்' வகை மலைப்பாம்பு என்பதை உணர்ந்து, உடனடியாக மில்வாக்கி பகுதி விலங்கு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

பாம்பு பத்திரமாக மீட்பு

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு மீட்பு நிபுணர் சிண்டி ஸ்டெய்ன்லி, காரின் என்ஜினுக்குள் சிக்கியிருந்த பாம்பை எந்தவொரு காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்டார். இந்த பாம்பு யாரோ ஒருவரால் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு, பின்னர் தப்பியிருக்கலாம் அல்லது அவர்களால் கைவிடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com