ஜப்பானின் பிரபல ஓவியர் யாயோய் குசாமா காலமானார்

ஓவியர் யாயோய் குசாமாவின் பிரபலமான ”ரெட் பம்ப்கின்” சிற்பம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது
யாயோய் குசாமா
Published on

டோக்கியோ,

ஜப்பானை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் யாயோய் குசாமா தனது 97 வயதில் காலமானார்.

குசாமாவின் ஓவிய கலைகள்

ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் 1929-ம் ஆண்டு பிறந்தார் யாயோய் குசாமா. இவர் சிறுவயதில் இருந்தே ஓவியம் சார்ந்த கலைத்துறையில் ஆர்வமிக்கவராக இருந்து வந்தார். கலைத்துறை மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் சென்ற அவர், தனது பிரத்யேகமான புள்ளி வடிவ ஓவியங்களால் புகழ்பெற்றார். சிறிது காலத்திலேயே 'இன்பினிட்டி நெட்ஸ்' என்ற ஓவியத் தொடரை வெளியிட்டு பிரபலமானார்.

1960-களில் ஆண் ஆதிக்கம் நிறைந்த நியூயார்க் கலை உலகில் தனது தனித்துவமான படைப்புகளால் கவனம் பெற்று, அங்குள்ள கலைத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். நியூயார்க்கில், 1965 ஆம் ஆண்டு தனது முதல் "இன்பினிட்டி மிரர் ரூம்" கலையை உருவாக்கினார். ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தாலும், அது பல கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பிரம்மாண்டமான விண்வெளியில் நிற்பது போன்ற உணர்வைத் தரும். இது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடையே வரவேற்பை பெற்றது.

பின்னர் பல ஆண்டுகள் கலை உலகில் புறக்கணிக்கப்பட்ட போதிலும், தனது 80 மற்றும் 90 வயதில் உலகின் மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவராக குசாமா உயர்ந்தார். அவர் வரைந்த ஓவியம் ஒன்று 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சுமார் 10.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையானது. இது இந்திய மதிப்பில் சுமார் 100.28 கோடி ஆகும்.

இறுதி சடங்கு

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மனநல சிகிச்சைக்காக டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 14-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கை அமைதியான முறையில் முடிக்க விரும்பியதால், 13 நாட்கள் கழித்து இன்று கலை நிறுவனத்தால் அவரது மரண செய்தி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவு கலைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com