

ஓஹியோ,
குஜராத் மாநிலம் கேடா மாவட்டம் நாடியாத்தைச் சேர்ந்தவர் ஹிதேஷ்பாய் சுதார். இவர் தனது மனைவி ஹினாபென், மகள் இஷானி (வயது 20) ஆகியோருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஓஹியோ மாகாணம் வூஸ்டரில் உள்ள ஒரு ஓட்டலில் ஹிதேஷ்பாய் சுதார் பணிபுரிந்து வந்தார். மேலும், அந்த ஓட்டலிலேயே மனைவி, மகளுடன் வசித்தும் வந்தார். ஹினாபென் ஒரு நிறுவனத்திலும், இஷானி ஒரு உணவகத்திலும் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று அதிகாலை ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஓட்டல் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. மேலும், அங்கு பயங்கர வெடிப்புகளும் ஏற்பட்டன.இதில் ஹிதேஷ்பாய் சுதார், ஹினாபென், இஷானி ஆகியோர் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ விபத்தில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் 3 பேரும் வெளியே வர முடியவில்லை. அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.