அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 6 பேர் பலி

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 6 பேர் பலி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 3 மாடிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 70 பேர் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீப்பிடித்தது. கீழ் தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். ஆனாலும் சில வீடுகளில் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயில் கருகி 6 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த தீவிபத்தில் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வந்த 2 பூனைகள் மற்றும் ஒரு நாய் செத்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com