அமெரிக்காவின் தனியார் நிறுவன விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை


அமெரிக்காவின் தனியார் நிறுவன விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை
x
தினத்தந்தி 3 March 2025 10:55 AM IST (Updated: 3 March 2025 10:55 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவின் புளு கோஸ்ட் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது.

வாஷிங்டன்,

விண்வெளி ஆராய்ச்சில் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக பூமியின் ஒரே துணைக்கோளான நிலவை ஆய்வு செய்யும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக விண்கலங்களை அனுப்பி வருகின்றன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிலவில் தரையிறங்கி பரிசோதனை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று உள்ளன.

இதற்கிடையே தனியார் நிறுவனங்களும் நிலவில் இறங்கி பரிசோதனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' நிறுவனம் கடந்த ஜனவரி 15-ந் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது.'புளூ கோஸ்ட்' என்ற இந்த விண்கலம் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது. நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த இந்த விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நேற்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவின் வடகிழக்கு விளிம்பில் உள்ள பழங்கால எரிமலை குவிமாடத்தின் சரிவில் தரையிறங்கியது.

தனியார் நிறுவனம் ஒன்று நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அமெரிக்காவின் 'இன்டுயடிவ் மிஷின்ஸ்' என்ற நிறுவனம் கடந்த ஆண்டு நிலவில் விண்கலத்தை தரையிறக்கி இருந்தது. எனினும் அது லேசான சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.நிலவில் கால்பதித்த இந்த விண்கலம், நிலவின் தரைப்பரப்பை படம்பிடித்து அனுப்பி உள்ளது. அதில் அதன் கால்தடம் பதிவாகி உள்ளது. இந்த விண்கலத்தில் மண் பகுப்பாய்வி, கதிர்வீச்சு சகிப்புத்தன்மை கொண்ட கணினி உள்ளிட்ட 10 கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் ஒரு நிலவு நாள் முழுவதும் (14 பூமி நாட்கள்) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 14-ம் தேதி சூரிய ஒளியை பூமி மறைக்கும்போது உயர் திறன் கொண்ட புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story