

வாஷிங்டன்,
அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொண்டு தங்கி இருந்ததாக இந்திய மாணவர்கள் 129 பேர் மீது விசா மோசடி புகார் எழுந்துள்ளது. அவர்கள் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பி.க்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்திய மாணவர்கள் சரியாக நடத்தப்படுவதுடன், தூதரக தொடர்பினைப் பெற அனுமதிக்க வேண்டும் என்று பிரபல இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான எம்.பி.க்கள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இந்த கடிதத்தில் தாமஸ் சூஸ்ஸி, ராப் உட்டால், பிரெண்டா லாரன்ஸ் உள்ளிட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கிடையே 129 மாணவர்களில் 117 பேர் தூதரக தொடர்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் என இந்திய அரசு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.