

பாரிஸ்,
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக அந்நாட்டில் 25- ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் 3-வது அலை பிரான்ஸில் பரவுவதாக நேற்று அந்நாட்டு அரசு அறிவித்தது. அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரான்சில், சில பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாரிஸ் மற்றும் சில பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை நடப்பு வார இறுதியில் இருந்து அதிகரிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் மூலம், புதிய பெருந்தொற்று பரவலை தவிர்க்க முடியும் என்ற நாட்டில் மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்க வேண்டியிருக்காது என நம்புவதாகவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.