

பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற 3 லட்சம் ஆணுறைகளை திரும்பப் பெறவும், அவற்றின் விற்றபனைக்கு தடை விதிக்கவும் பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவிட்டது.
பிரான்ஸ் நாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ஆணுறைகளை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெறவும், அவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்கவும் பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணுறைகளில் சிறிய துளைகள் இருப்பதும், அவை எளிதில் வெடிக்கும் அபாயம் கொண்டிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதாரம் மற்றும் நுகர்வோர் மோசடி தடுப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகியவை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வக பரிசோதனைகளில் பாதுகாப்புத் தரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, பல்வேறு மருந்தகங்கள் மற்றும் கடைகளில் விற்கப்பட்ட சுமார் 2,60,000 ஆணுறைகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையான பாதுகாப்பு முத்திரையோ அல்லது பிரெஞ்சு மொழி லேபிளோ இல்லாமல் இணையதளங்களில் விற்கப்பட்டன.
மேலும், 30 வகையிலான 40,000-க்கும் மேற்பட்ட ஆணுறைகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு, அவை ஆன்லைன் வர்த்தகப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஒகாமோட்டோ மற்றும் பிரான்ஸ் பிராண்டுகளான மை லூபி, பிரைடே பே உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புத் தொகுப்புகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்ட இந்தத் தரமற்ற ஆணுறைகளைப் பயன்படுத்திய பொதுமக்களுக்குப் பிரான்ஸ் சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் உடனடியாகப் பாலியல் தொற்று பரிசோதனைகள் மற்றும் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களை இந்த செய்தி உலுக்கியுள்ளது.