ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஜி-7 நாடுகள் ஆகஸ்ட் 24-ந் தேதி ஆலோசனை

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 24-ந் தேதி ஜி-7 நாடுகளின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஜி-7 நாடுகள் ஆகஸ்ட் 24-ந் தேதி ஆலோசனை
Published on

லண்டன்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை தலீபான்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் விமானத்தில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானின் நிலையை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என்றும் அந்நாட்டு அரசுகள் தெரிவித்தன.

அதே சமயம் தலிபான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், பெண்கள் சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம் என்றும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகளை வழங்க தலிபான் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய ஜி-7 நாடுகளின் மாநாடு இந்த வாரம் கூட்டப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து தற்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 24) ஜி-7 நாடுகளின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com