

லண்டன்,
உலக அமைதி குறியீட்டில் மீண்டும் முதலிடம் பிடித்து ஐஸ்லாந்து சாதனை படைத்துள்ளது. இந்தியா 12 இடம் பின்தங்கி சரிவை சந்தித்துள்ளது.
லண்டன் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் அமைப்பு, இந்த ஆண்டிற்கான உலக அமைதி குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகின் 163 நாடுகளில் நிலவும் அமைதி மற்றும் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பட்டியலிலும், ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து உலகின் மிக அமைதியான நாடாக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 19 ஆண்டுகளாக இந்த நாடு தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைந்த குற்ற விகிதம் மற்றும் ராணுவமின்மை இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இப்பட்டியலில் இந்தியா 127-வது இடத்திற்கு தள்ளப்பட்டு பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 115-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 12 இடங்கள் சரிந்துள்ளது. மணிப்பூர் இனக்கலவரம், உள்நாட்டு மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான எல்லைப் பதற்றங்கள் ஆகியவையே இந்தியாவின் இந்த சரிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.