உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.35 கோடியை தாண்டியது

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.35 கோடியைக் கடந்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.35 கோடியை தாண்டியது
Published on

வாஷிங்டன்,

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தணியவில்லை. எனினும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன

.இந்தநிலையில் சீனாவின் உகான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது. ஆனால், இதை சீனா மறுத்து வருகிறது. கொரோனா தோன்றியது எப்படி என்று விசாரணை நடத்த ஒரு நிபுணர் குழுவை உலக சுகாதார நிறுவனம் நியமித்துள்ளது.

இந்த நிபுணர்கள், கால்நடை மருத்துவம், தொற்றுநோய் ஆய்வு, உணவு பாதுகாப்பு, கொள்ளை நோய் ஆய்வு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவர்.

இந்த குழு, சீனாவுக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஒருவழியாக சமீபத்தில் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, நிபுணர் குழு சீனாவுக்கு சென்றது. 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு 29-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது.

கொரோனாவுக்கு எதிரான சீனாவின் ஆரம்ப கால அனுபவத்தை விளக்கும் அருங்காட்சியகத்தை அவர்கள் பார்வையிட்டனர். சீன விஞ்ஞானிகளிடம் விசாரணை நடத்தினர்.

ஆரம்ப காலத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்ற 2 ஆஸ்பத்திரிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில், 3-வது நாளாக நேற்றும் உகான் நகரில் அவர்களது ஆய்வு தொடர்ந்தது. அங்குள்ள பெரிய உணவு சந்தைகளில் ஒன்றான பைஷாசூ மார்க்கெட்டுக்கு நேரில் சென்றனர். இந்த மார்க்கெட்டில் விலங்குகள் உணவுக்காக உயிருடன் விற்கப்படுகின்றன. இந்த விலங்குகளில் இருந்து கொரோனா பரவி இருக்கலாம் என்று பரவலாக கருதப்படுகிறது.

பொது முடக்க காலத்தில் கூட உகான் நகர் முழுவதற்கும் இங்கிருந்துதான் உயிரினங்கள் வினியோகிக்கப்பட்டன. அந்த மார்க்கெட்டை பகுதி பகுதியாக நிபுணர் குழுவினர் நடந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சீன அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்நிலையில் உலகளவில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.35 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.51 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2.61 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.08 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com