

ஏதென்ஸ்
கிரீஸ் நாட்டில் இருந்து கடல் வழியாக அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வேலை, சிறந்த வாழ்வை தேடியும், பிற விசயங்களுக்காகவும் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும், சட்டவிரோத வகையிலான இந்த படகு பயணத்தில் ஆபத்தும் உள்ளது.
இந்த நிலையில், கிரீட் தீவின் தெற்கு கடற்கரை பகுதியில், கடலில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 அகதிகள் பலியானார்கள். 20 பேர் காணாமல் போயுள்ளனர்.
சம்பவத்தின்போது, படகில் இருந்து வர்த்தக கப்பல் ஒன்றில் ஏணி வழியே அகதிகள் ஏற முயன்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. பலரும் ஒரே நேரத்தில் நெரிசலான பகுதிக்கு சென்றனர். இதனால், படகு ஒரு பக்கத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பலர் நீருக்குள் விழுந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த மற்றொரு சரக்கு கப்பல் 20 பேரை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தது. 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடலில் இருந்து, வேறு 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உள்ளது.
எனினும், படகில் 50 பேர் வரை இருந்தனர் என கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து, கடலோர காவல் படை கப்பல்களும், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ விமானமும் மீட்பு பணிக்காக சென்றுள்ளன.