உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிரேட்டா தன்பெர்க்

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாநாட்டில் கிரேட்டா தன்பெர்க் கலந்து கொண்டார்.
உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிரேட்டா தன்பெர்க்
Published on

ரோம்,

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான கிரேட்டா தன்பெர்க்(வயது 18), பருவநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தனது சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வரும் கிரேட்டா தன்பெர்க், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சர்வதேச அளவிலான மாநாடுகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

பொது மேடைகளிலும், மாநாடுகளிலும் தனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாக பேசுபவராக கிரேட்டா தன்பெர்க் அறியப்படுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக தலைவர்கள் அக்கறை இன்றி செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் இவர், தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்கேடு நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில், பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த இந்த மாநாட்டில் பேசப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய கிரேட்ட தன்பெர்க், உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசிய போது, இது போன்ற மாநாடுகளை நடத்துவதன் மூலம் இளம் தலைமுறையினரின் கோரிக்கைகள் கேட்கப்படுவதாக உலக தலைவர்கள் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும், மனிதர்கள் வாழ ஒரே ஒரு பூமி தான் இருக்கிறது. இன்னொரு பூமி இல்லை. மனிதர்கள் வாழத் தகுதியுடைய இன்னொரு கோள் இதுவரை கண்டறியப்படவில்லை. அதனால் நமக்கு இருக்கும் ஒரே வழி இப்போது நாமிருக்கும் இந்த பூமியை பாதுகாப்பது மட்டுமே. அதைச் செய்வோம். உலகத் தலைவர்கள் அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுங்கள் என்று கிரேட்டா தன்பெர்க் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com